> குருத்து: November 2008

November 30, 2008

பந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்


//புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிதமான பொருளாதார வளர்ச்சி’-யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்பொழுது வந்திருப்பது மாரடைப்பு// - புதிய கலாச்சாரம், அக். 2008.***

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

****

இன்று நிதி மூலதன உலகத்தை ஆட்டி வைப்பவை பந்தய ஒப்பந்தங்கள் (Derivatives) தான். பல நிதிக் கருவிகளில் ஒன்றான இந்த பந்தய ஒப்பந்தங்கள் தங்களது மதிப்பை தமது சொந்த, உண்மையான மதிப்பிலிருந்து பெறுவதில்லை; எந்த சொத்து அல்லது தொழில் நடவடிக்கையை (Transaction) வைத்து ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அதிலிருந்து தனது மதிப்பைப் பெறுகிறது.

எவைகள் மீதெல்லாம் இந்த பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன? சில உதாரணங்களை பார்க்கலாம்.

• சரக்குகள்
• பங்குகள்
• கடன் பத்திரங்கள்
• வட்டி விகிதங்கள்
• அன்னிய செலாவணி மாற்று விகிதங்கள்
• பங்குச் சந்தை குறியீட்டு எண்
• பணவீக்க விகிதங்கள்
• தட்பவெட்ப நிலைக் குறியீட்டு எண்கள்

ஒரு உதாரணம் மூலம், இதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

பங்குகள் மீதான பந்தய ஒப்பந்தம்

டி.வி.எஸ்-ஸின் பங்குகளின் உண்மை விலை ரூ. 10. கடந்த பல ஆண்டுகளில் உற்பத்தியில் ஈடுபட்டு, லாபம் பிரித்து கொடுத்ததில், அதன் இன்றைய மதிப்பு ரூ. 300 என வைத்துக் கொள்வோம்.

டி.வி.எஸ்-ஸின் பங்கு கடந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 300. இந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 350 என விற்கிறது. இப்பொழுது பந்தய ஒப்பந்தம் தொடங்குகிறது. அடுத்த மாதம் இதன் விலை ரூ. 400 வரைக்கும் உயரும். எவ்வளவு பந்தயம் என்கிறேன்? நீங்கள் ரூ. 350-ல் தான் நிற்கும். நீங்கள் உயராது என்கிறீர்கள். இருவருக்கும் பந்தயம் ரூ. 1 லட்சம். ரூ. 350-ஐ தாண்டினால், எனக்கு லாபம். உயராமல் அப்படியோ நின்றால், உங்களுக்கு லாபம்.

தள்ளி நின்று தானே, பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன? இவைகள் எப்படி அந்த சரக்கைப் பாதிக்கும் என நமக்கு சந்தேகம் வருகிறது. பாதிக்கும். எப்படி என்கிறீர்களா?



நான்கு நாட்களுக்கு முன்பு, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு, இந்த போட்டியின் மீது, ஊக வாணிகத்தில் பந்தய ஒப்பந்தம் போடப்படுகிறது (என வைத்துக்கொள்வோம்.) எப்படி? இந்தியா ஜெயிக்கும். இங்கிலாந்து ஜெயிக்கும் – என இரண்டு தரப்பிலும் சில நூறு கோடிகள் புரள்கிறது.

இந்தியா ஜெயித்தால் சில கோடிகளை இழக்கப் போகும் தரப்பு, இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவில் நன்றாக பந்து வீசக்கூடிய ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேலை அணுகி ஒரு கோடி தருகிறோம் பவுலிங்கைச் சொதப்புங்கள் என்கிறது. ஒருவரோ அல்லது இருவரோ இதில் சிக்கி சொதப்புவார்களா இல்லையா?

இந்த ஊக வணிகத்தில் பலர் சிக்கியிருக்கிறார்கள். கிரிக்கெட்டின் வரலாறு நமக்கு ஏற்கனவே நிரூபித்து இருக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள். தள்ளி நின்று போடப்பட்டாலும், பந்தய ஒப்பந்தங்கள் சரக்கைப் பாதிக்கிறதா இல்லையா?

பின்குறிப்பு : ஏகாதிப்பத்திய நாடுகளில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகத்தில் 1930 காலகட்டத்தில் வந்த பொருளாதார நெருக்கடியை விட பல மடங்கு பெரிதாக இருக்கிறது. இந்தியாவில் இன்னும் இந்த பாதிப்புகள் தொடக்க அளவில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. தொடக்க விளைவுகளே நமக்கு பயம் ஏற்படுத்துகின்றன.

இவ்வளவு பெரிய நெருக்கடி எப்படி ஏற்பட்டது? எல்லோருடைய மனதிலும் இந்த கேள்வி திரும்ப திரும்ப அலை அலையாய் எழுந்து கொண்டேயிருக்கின்றன.

ஊக வணிகம், பங்குச் சந்தை சூதாட்டம், பந்தய ஒப்பந்தங்கள், நிதி மூலதனத்தின் வளர்ச்சி – இதை எதைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்காத அரை வேக்காட்டு பேர்வழிகள் இந்த பொருளாதார நெருக்கடி வழக்கமானது தான். கடந்த காலங்களில் சின்ன அளவில் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் பெரியது. விரைவில் சரியாகிவிடும் என்கிறார்கள்.

தனிநபர்களை விடுங்கள். பத்திரிக்கைகள் கூட இதனை ஆய்ந்து எழுதுவதில்லை. குரு பெயர்ச்சிக்காக புத்தகம் போட்டு விற்பதில் எல்லா பத்திரிக்கைகளும் கவனமாய் இருக்கின்றன.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை புரிந்துகொள்வதும், முதலாளித்துவத்தின் கோரத்தை, அதன் சித்து வேலைகளை, அதனால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை சக நண்பர்களிடம், உறவுகளிடம் பகிர்ந்து கொள்வது மிக அவசியம்.

இது தொடர்பாக தேடும் பொழுது செய்திகள் குறைவாக கிடைக்கின்றன. கிடைக்கின்ற தகவல்களைத் திரட்டி தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது, பணிச்சூழலில் தேடுவது சிரமமாக இருக்கிறது. பல சமயங்களில் மின்சாரம் இல்லாமல் வலையில் உலாவ முடியவில்லை. ஆகையால், வாய்ப்பு உள்ளவர்கள் தேடி, பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

americadhival@gmail.com

November 24, 2008

கொள்ளையடித்தது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!





//“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது// - புதிய கலாச்சாரம் – அக். 08.

அமெரிக்காவில் 20 வங்கிகள் ஏற்கனவே மஞ்சள் கடிதாசி கொடுத்து திவலாகிவிட்டன. திவாலாவது அமெரிக்காவில் இப்பொழுது தொடர்கதையாகி வருகிறது. நேற்று புதிதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த “டவ்னி சேவிங்ஸ் அண்டு லோன் அசோசியேசன்” மற்றும் “பி.எப்.எப். பேங்க் அன்ட் டிரஸ்ட்” இரண்டு வங்கிகள் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டன. இவைகள் இரண்டும் வீட்டுவசதி மற்றும் நுகர்வு கடன்கள் வழங்கி வந்தவை.

உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான “ஜெனரல் மோட்டார்ஸ்” நிறுவனம் திவால் அறிவிப்பை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்களாம். இந்த திவால் அறிவிப்பைத் தவிர்க்க அந்த நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியைப் சந்தித்து 25 பில்லியன் டாலர்கள் (மக்களின் வரிப்பணத்தை) கேட்டிருக்கிறார்களாம்.


அமெரிக்காவின் “சிட்டி வங்கி” யின் பங்குகள் ஒரே நிதியாண்டில் 83% வீழ்ச்சியாகி, அதள பாதாளத்தில் கிடக்கிறது. ஏற்கனவே, உலகம் முழுவதும் 23000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டது. இந்தியாவில் 37 முக்கிய உயர்நிலை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மேலும், 52000 ஊழியர்களை நீக்க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே திவாலை தவிர்க்க இந்த வங்கி அமெரிக்க அரசிடம் 25 பில்லியன் டாலர்களை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டது முக்கிய செய்தி.

இப்படி நாளொரு வங்கி திவாலாவது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத மிகை (அராஜக) உற்பத்தியும், அதன் விளைவாய் எழுந்த நிதி மூலதனத்தின் தோற்றமும், நிதி மூலதனத்தைக் கொண்டு ஊக வாணிகத்தில் நிதி மூலதன கும்பல்கள் சூதாடி, ஊதிப் பெருக்கியதுதான் காரணம்.

கொள்ளையடித்தது நிதி மூலதன கும்பல்கள், ஏகாதிபத்திய வல்லரசுகள், மிகப்பெரிய வங்கிகள். ஆனால், இன்றைக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்படுவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தான். அமெரிக்காவில் ஏப்ரலில் வந்த தகவல்படி, மார்ச் மாதம் மட்டும் 80 ஆயிரம் தொழிலாளர்களும், ஜனவரி முதல் மார்ச் வரை 2.5 லட்சம் பேர் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.



அமெரிக்காவிற்கு காய்ச்சல் என்றால், நாமும் இங்கு மருந்து சாப்பிடுகிறோம். ஆம். தகவல் தொழில்நுட்பம், உருக்கு, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், சிமெண்ட், கட்டுமானம் துறைகளில் 30% வேலை இழப்பார்கள் என அசோசியேட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் (அசோசெம்) கணித்துள்ளது.

வருகிற தகவல்கள் இந்த கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.

“டாடா மோட்டார்ஸ்” நிறுவனம் தனது வாகன உற்பத்தி பிரிவை 25.11.2008 லிருந்து 5 நாட்கள் மூடுகிறது. இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை. 3000 தற்காலிக ஊழியர்களை நீக்கிவிட்டது. 3 ஷிப்டிலிருந்து 1 ஷிப்டாக குறைத்துவிட்டது.

அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுகிறதாம். ஷிப்டுகளை குறைத்துவிட்டதாம். இதனால், இதனை நம்பியிருக்கும் பல சிறு நிறுவனங்கள் இயங்க முடியாமல் மூடிவிட்டன.

கார் விற்பனை சரிந்ததால், டன்லப் டயர் நிறுவனம் தனது உற்பத்தியை காலவரையின்றி நிறுத்திவிட்டது. சென்னையில் 1000 ஊழியர்களையும், கொல்கத்தாவில் 1171 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மாதந்திர உதவித் தொகை ரூ. 1500 ரூபாயாம். இருக்கும் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்கமுடியாது.

அமெரிக்காவை காப்பியடித்து இந்தியாவிலும் காலியிடம் மற்றும் வீட்டின் விலையை செயற்கையாக ஏற்றி கொள்ளையடித்த ரியல் எஸ்டேட் பிசினெஸ் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

டி.எல்.எப்., யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட்ட 4000 கட்டுமான நிறுவங்களின் கூட்டமைப்பு விற்பனை விலையிலிருந்து 15% குறைத்துக்கொள்ள (லாபத்தில் நட்டம்?)முடிவு செய்திருக்கின்றன. இப்பொழுது பரிசு – கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி, படுக்கையறை இலவசம் என அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். வீடு வாங்கினால் கார் தருவதாக‌ நேற்று கூட தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். குர்கானில் கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இப்படி கட்டுமான தொழிலும் படுத்துவிட்டது.

இந்தியாவில் இப்படி கடந்த சில மாதங்களில் மட்டும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள்.

இலாபம் கொழித்த பொழுதெல்லாம் அள்ளிய முதலாளிகள் இப்பொழுது நெருக்கடி என்றதும் வேறு எதிலும் கை வைக்க முடியாத இவர்கள் தொழிலாளர்களின் தலையில் கை வைக்கிறார்கள். சம்பளத்தை பாதியாக குறைக்கிறார்கள். சிக்கன நடவடிக்கை (Cost Cutting) என்ற பெயரில் தொழிலாளர்களை வேலையிலிருந்து துரத்துகிறார்கள்.


நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியாவில் 30% பேர் வேலை இழப்பார்கள் என்று தனது கணிப்பைச் சொன்ன அசோசெம்-ஐ மத்திய அரசு (8,நவம். 2008) கண்டித்து இருக்கிறது.

பொருளாதார மந்தத்தால் இனி வருங்காலத்தில் உருவாகப் போகும் வேலை வாய்ப்பு தான் குறையுமே ஒழிய இப்பொழுது வேலை வாய்ப்பு எப்படி குறையும் என சிதம்பரம் வேலை இழந்த தொழிலாளர்களைப் பார்த்து சிதம்பரம் (1,நவம்.2008) எதிர் கேள்வி கேட்கிறார்.

மூலதனத்தின் மீதும், பொருட்கள் மீதும் அரசாங்கக் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் நீக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் அன்னிய மூலதனத்திற்குத் தாராளமாக திறந்து விடப்பட்டது தான் இத்தனை நெருக்கடிக்கும் காரணம்.

இவ்வளவு நடந்த பிறகும், தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக சோனியா அறிவித்துள்ளார்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இனி போராட்டம் இல்லாமல் வாழ்க்கையில்லை!

November 22, 2008

ஊகவணிகம் – பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?



மீண்டும் பங்குச் சந்தைக்கு வருவோம். பங்கு, பங்குச்சந்தை, பங்குச் சந்தை சூதாட்டம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த பதிவில் ஊக வணிகம் பற்றிப் பார்க்கலாம்.

//ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.// - புதிய கலாச்சாரம்.

பங்குச் சந்தைச் சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த காலங்களிலும் நெருக்கடி இருந்திருக்கின்றன. இப்பொழுது இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி ஏன்? காரணம் இருக்கிறது. நிதி மூலதன கும்பல்கள் நடத்திய ஊக வாணிகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிதான் காரணம்.

முதலில் உண்மை வணிகம், ஊக வணிகம் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

உண்மை வணிகம்

என்னிடம் 100 கிலோ கடலை இருக்கிறது. இன்னொருவருக்கு கடலையின் தேவை இருக்கிறது. நான் அதன் விலை ரூ. 1000 என்கிறேன். இருவரும் பேரம் பேசி ரூ. 900 என முடிவுக்கு வந்து, நான் பணம் பெற்றுக் கொள்கிறேன். இது உண்மை வணிகம்.

ஊக வணிகம்

சரக்கு இல்லாமலே சூதாடுவது. கடலையை கண்ணில் பார்க்காமாலே சூதாடுவது. ‘அ’ என்பவர் கடலை இன்னும் ஒரு மாதத்தில் ரூ. 1500 விற்கும் என்பார். “ஆ” என்பவர் ரூ. 800 க்கு தான் விற்கும். என்பார். இருவரும் பந்தயம் கட்டிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் என்ன நிலையோ அதற்கு தகுந்தபடி பந்தயப்பணம் கைக்கு மாறும்.


இந்த ஊக வணிகத்தின் அளவு எவ்வளவு என பார்த்தால் ...

உலகம் முழுவதிலும் நடக்கும் நிதி பரிவர்த்தனையில் உண்மை வணிகம் 2 %. மீதி 98% ஊக வணிகம் தான்.

உலக நிதிச் சந்தையில், இன்றைய நிலையில் ஓராண்டு காலத்திற்குள் நடக்கும் அன்னிய செலாவணி கைமாற்றுகளின் அளவு 10,00,00,000 கோடி டாலர்கள்! இதில் உற்பத்தியோடு தொடர்புடையது 2% மட்டுமே. மொத்த உலகத்தின் உள்நாட்டு உற்பத்தி அளவு இதில் 4% மட்டுமே! (Red Star – Oct 2006)

ஆச்சரியமாய் இருக்கிறதா!

ஊகவணிகத்தில் பந்தய ஒப்பந்த வகைகள் (deraivatives) இருக்கின்றன. நிதி மூலதன வங்கிகள் இந்த பந்தய வகையறாக்களில் விளையாடி கொள்ளையடித்தது தான் இவ்வளவு பெரிய நெருக்கடி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் கிடையாது. இதன் தன்மை, வகைகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அதைப் பற்றி சில தகவல்கள்.

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

பழைய நினைவுகளில் கிளறிப் பார்த்தால்...


பந்தய ஒப்பந்த வகையறாக்களில் கொடிகட்டிப் பறந்து, பிறகு அவைகளினாலேயே என்ரான் குழுமம் நொறுங்கி விழுந்து திவாலானது. இந்த நிறுவனத்திற்குத் தான், மின் உற்பத்தியிலேயே ஈடுபடாமல், மகாராஷ்டிரா அரசு மாதம் 85 கோடி கட்டி, அதன் மின்சார வாரியம் திவாலானது. பிறகு, என்ரான் திவாலானதால், மகாராஷ்டிரா அரசு தப்பித்தது.




பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற் இரு மேதைகளால் நடத்தப்பெற்ற நீண்டகால முதலீட்டு நிர்வாகம் (LTCM) என்ற நிறுவனம் 1998ல் நொறுங்கியது இதற்கு இன்னுமொரு உதாரணம். இதன் கணக்குப் புத்தகங்களில் காணப்பட்ட பந்தய ஒப்பந்தங்களின் பண மதிப்பு 1,40,000 கோடி டாலர்களாகும்.

November 20, 2008

எஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டருக்கு கோரிக்கை! வாவ்! என்ன ஒரு அருமையான திட்டம்!


இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக” என்ற சன் தொலைக்காட்சியின் பில்டப் போலவே, திருவள்ளூர் மாவட்ட வருவாய் நிர்வாகத்தில், எஸ்.எம்.எஸ் மூலம் பொதுமக்கள் மனு கொடுக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறதாம்.

நமக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா நகல் வேண்டுமென்றால், கலெக்டருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அவர்கள் அதை மனுவாக ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு தேவையான சான்றிதழை வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைத்துவிடுவார்களாம்.

சான்றிதழுக்கான பணம் செலுத்த வேண்டுமே! பி.எஸ்.என்.எல். நிறுவனம் உங்கள் செல்லில் பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிடும். இதன் மூலம் மக்கள் தங்களுடைய வீண் அலைச்சலை தவிர்க்கப் போகிறார்களாம்.

திட்டம் கேட்க காதுக்கு இனிமையாக இருக்கிறது. நடைமுறைக்கு?

இந்த அரசு தரக்கூடிய ஒவ்வொரு சான்றிதழுக்கும் அலைய வேண்டிய அலைச்சல் இருக்கிறதே! சொல்லி மாளாது. ஒரு ரேசன் கார்டுக்கு நான் ஒரு வருடம் அலைந்தேன். 15 முறை போயிருப்பேன். ஒவ்வொருமுறையும், பர்மிசன் சொல்லிவிட்டுப் போவேன். அங்கு கூட்டமோ கூட்டம். கேட்க வேண்டிய நபர் சீட்டில் இருக்காது. பக்கத்து சீட்டிடம் கேட்டால், வருவார் என்பார்கள். 1 மணி நேரம் கழித்து திரும்ப கேட்டால், விடுப்பு எடுத்திருக்கலாம் என குத்துமதிப்பாய் பக்கத்து சீட் பதில் சொல்லும்.

இப்படி பர்மிசன் பலமுறை அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டியதாகிவிட்டது. 10 முறைக்கு மேல் போகும் பொழுது, அலுவலகத்தில், “ரேசன் கார்டுக்கு தானே! போகிறீர்கள். வேறு எங்கும் இல்லையே!” என நக்கலாய் கேட்பார்கள். வாங்காமலே விட்டுவிடலாம் என்றால், ரேசன் கார்டு இருந்தால் தான், கேஸ் சிலிண்டர் தருவேன் எனச் சொல்லிவிட்டார்கள்.

இந்த எஸ்.எம்.எஸ். திட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது. இப்படி பலமுறை அலையவிடுதலுக்கு காரணம் அரசு அலுவலகங்களில் விளையாடும் லஞ்சம் தான். கொஞ்சம் அலையவிட்டால் தான், ‘loss of pay” க்கு பயந்து லஞ்சமே தேறும். அதுவும் நிறைய தேறும் என்ற நிலை இருக்கிறது. அரசு தனக்கு தேவையான பணத்தை மொபைல் பில்லில் பிடித்துக்கொள்வார்கள். ஆனால், லஞ்சப்பணத்தை பற்றி இந்தத் திட்டத்தில் எதுவுமே திட்டத்தில் இல்லையே! இதனால் இந்த திட்டத்தை கிடப்பில் போட 99% வாய்ப்பு இருக்கிறது.

எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தொலைபேசி வைத்திருப்பார்கள். பல அலுவலகங்களுக்கு சில சில்லறைத் தகவல்களுக்கு தொலைபேசி செய்தால், “Does’not Exist” என்ற குரல் தான் கேட்கும். அல்லது தொலைபேசி ரிங் அடித்துக் கொண்டே இருக்கும். வெறுத்துப் போய்விடுவோம்.

இப்படிப்பட்ட திட்டங்கள் எங்கு நடைமுறைக்கு சாத்தியப்படும் என்றால்... மக்கள் நலம் நாடு அரசாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

பின்குறிப்பு : உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். காதைக் கொடுங்கள். முதலாளிகள் போன் செய்தால் எல்லா அதிகாரிகளும் கட்டாயம் பேசுவார்கள். எப்படி என்கிறீர்களா? அதற்கு நவீன தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.

அந்த அதிகாரியே முதலாளிக்கு தனது செல்பேசி எண்ணைத் தானே முன்வந்து தருவார். போன் அடித்தால், தவறாமல் எடுப்பார். அவரை டீக்கடைக்கோ அல்லது டாஸ்மார்க் கடைக்கோ முதலாளியோ அல்லது அவரது பிரதிநிதியோ அழைத்தால் உடனடியாக வந்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு போவார். வேலையும் கனக்கச்சிதமாக முடித்தும் தருகிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள். இது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நலம் நாடும் அரசா? அல்லது ‘முதலாளி’ மக்களுக்கான அரசா?

November 18, 2008

டாலர் யானை! புகுந்தாலும் நட்டம்! வெளியேறினாலும் நட்டம்!



ஒரு நாடு கடும் பொருளாதார சுனாமியில் சிக்கி, திவலாகிவிட்டது. ஆனால், மூன்றே மாதங்களில் உலக நாடுகளில் அதன் நாணய மதிப்பு உயருகிறது. இது உலக அதிசயம் அல்லவா!

இந்த அதிசயம் உலகத்தில் வேறு எந்த நாட்டிற்கும் நடக்க வாய்ப்பேயில்லை. அமெரிக்காவிற்கு மட்டுமே அந்த வாய்ப்பு. டாலரில் இருக்கிறது அதன் சூட்சுமம்.

இதே பொருளாதார நிலைமையில் இந்தியா சிக்கியிருந்தால், இந்தியா இன்னொரு சோமாலியா-வாக சில ஆண்டுகளில் உருமாறியிருக்கும்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகளை கைவிடாத வரை இந்தியாவிற்கு அந்த நாள் வெகு தூரமில்லை.

****

‘லைட்லிங்க்’ என்ற பதிவர் டாலரில் உள்ள சூட்சுமத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறார். படியுங்கள்.

\\எப்பொழுதெல்லாம், அமெரிக்கா மட்டும் தனியாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். ஆனால், அது உலக நாடுகளின் பொது நெருக்கடியாக விரைவில் மாற்றப்படும்.//

//உலக அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் கூட டாலரின் சரிவை விரும்புவதில்லை.//

***

உயர்கின்ற டாலர் உணர்த்துகின்ற பாடம்

கடந்த ஆறு வருடங்களாக, உலக நாடுகளின் சில முக்கியமான நாணயங்களுக்குக்கெதிராக டாலர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இந்தக் காலத்தில் பின்னடவை சந்தித்த அமெரிக்கப் பொருளாதாரம், கடந்த ஓராண்டுக்காலமாக மேலும் கடுமையான நெருக்கடிக்குள்ளானது.

டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்புயர்வு சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதியை பெருமளவு பாதித்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் விலை உயர்ந்ததே அதற்கு காரணம். தமிழ்நாட்டில் திருப்பூர் பின்னலாடைகள், கோவையின் என்ஜீனியரிங் பொருட்கள் உட்பட ஏற்றுமதி நெருக்கடிக்குள்ளானதும் அண்மைக்கால அனுபவம்.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டாலர் ரூ. 35 என்ற அளவில் மேலும் வீழ்ச்சியடையும் என்றெல்லாம் சென்ற ஆண்டு கணிக்கப்பட்டது. ஆனால், இன்று நேர்மாறாக, டாலர் மதிப்பு ரூ. 50-ஐத் தொட்டு உயர்ந்து நிற்பதை பார்க்கிறோம். ஜப்பானின் யென்னைத் தவிர்த்து, மற்ற உலகின் அனைத்து முக்கிய கரன்சிக்களுக்கெதிராகவும் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதுவும் அமெரிக்காவின் நிதிச்சந்தை நெருக்கடி கடுமையாகவுள்ள காலத்தில் இது நிகழ்ந்து வருகிறது.

ஒருநாடு கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்போது, அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு எவ்வாறு உயர முடியும் என்று எழும் இயல்பான கேள்விக்கான காரணங்களை தேடுவதும், பாடங்களை கற்றுக் கொள்வதுமே இக்கட்டுரையின் நோக்கம். முதலில், டாலர் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைந்தது என பார்ப்போம்.

அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்தே...

அமெரிக்கா நீண்ட காலமாகவே, பிற நாடுகளிடம் கடன் வாங்கி தனது சொந்த நாட்டு செலவுகளை சமாளிக்கும் நடைமுறையைக் கொண்ட ஒரு நாடு. அதனுடைய வெளிநாட்டுக் கடன் 9.4 டிரில்லியன் (9.4 இலட்சம் கோடி டாலர்) என்பது அரசாங்கக் கணக்கு. இது 12 டிரில்லியன் டாலர் வ்ரை இருக்குமென “ஐரோப்பிய யூனியன் டைஜஸ்ட்” தெரிவிக்கிறது. மேலும், தனது உள்நாட்டு, வெளிநாட்டு பற்றாக்குறைகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் சமாளிப்பதற்காக, வேலை நாள் ஒன்றுக்கு 4 பில்லியன் (400 கோடி) டாலர் வீதம் ஆண்டு முழுவதும் கடன் வாங்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. அமெரிக்காவின் கடன்களில், ஏறக்குறைய 75 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிடமிருந்து பெறப்பட்டதே என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அதனுடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏறக்குறைய 800 பில்லியன் டாலர் அளவை நெருங்கியிருக்கிறது. இது அமெரிக்கா உள்நாட்டு மதிப்பில் 7 சதவிகிதம் ஆகும். இது தவிர, 2007-ல் வெடித்த சப்-பிரைம் நெருக்கடி, பணவீக்கம் என பல பிரச்சனைகள். இயல்பாக இவையெல்லாம் டாலரின் மதிப்பினை வீழ்ச்சியடையச் செய்தன. அமெரிக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி. எனவே, அதன் நாணயம் மதிப்பிழக்கிறது. இதுவரை, சூழ்நிலையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முதல், டாலர் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது. இது எப்படி என்ற நமது கேள்வியும் இங்கிருந்து தான் தொட்ங்குகிறது.

சாதகங்களும், சாகசங்களும்

எப்பொழுதெல்லாம், அமெரிக்கா மட்டும் தனியாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். ஆனால், அது உலக நாடுகளின் பொது நெருக்கடியாக விரைவில் மாற்றப்படும். (தனது நெருக்கடியை உலக நெருக்கடியாக மாற்றுவதில் அமெரிக்க் ஏகாதிப்பத்தியதிற்கு உள்ள சாதகங்களையும், அதன் கடந்த கால சாகசங்களையும் நினைவில் நிறுத்திக்கொண்டால், புரிதல் எளிதாகும்) அடுத்த கட்டத்தில் அமெரிக்காவின் கை ஓங்கும். அத்துடன், டாலரின் மதிப்பும் மீண்டும் உயரும். இது இன்றைய உலக பொருளாதாரத்தின் எழுதப்படாத விதி. இதற்கு அடிப்படையான காரணம் 1973ல் டாலருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர், சட்டரீதியாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் அது உலக பரிவர்த்தனை நாணயமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதே காரணம். அதன் அரசியல், இராணுவப் பின்னணி என்பதெல்லாம் தனிக்கதை.



1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொது நாணயமாக யூரோ அறிமுகமானபொழுது, டாலருக்கு போட்டியாக அது உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாணயம் என்ற வகையில் பொருளாதார ரீதியாக அது வலிமை பெற்றாலும், இன்றுவரை அரசியல் ரீதியாக டாலரின் இடத்தை யூரோவால் அடைய முடியவில்லை. எண்ணெய் ஏற்றுமதியில் யூரோவிற்கு மாறுவது என்ற சதாம் ஹீசேனின் முடிவு ஈராக் போருக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? இன்றைக்கும் கூட ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் தவிர உலக எண்ணெய் வர்த்தகத்தில், வேறு எந்த நாடும் யூரோவை பரிவர்த்தனை நாணயமாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

உலக அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் கூட டாலரின் சரிவை விரும்புவதில்லை. சீனாவின் 2 டிரில்லியன் (2 லட்சம் கோடி) டாலர் அந்நியச் செலாவணியின் ஆகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 300 பில்லியன் (30,000 கோடி) டாலர் சேமிப்பும் இத்தகையதே. அரபு நாடுகளின் பெட்ரோ டாலர்கள், லண்டன், பாரீஸ், ஜீரிச் (சுவிட்சர்லாந்து) மையங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் யூரோ டாலர்கள் (யூரோ நாணயம் அல்ல) அனைத்துமே இவ்வகைப்பட்டவையே.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் டாலரே இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. தவிர, உலக உற்பத்தியில், அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம். ஏற்றுமதியை சார்ந்தே நிற்கும் நாடுகள் பல பொருளாதார ரீதியாக அமெரிக்கச் சந்தையை நம்பியிருக்கும் நிலை தொடர்கிறது.

டாலர் யானை

உலகமயமாக்கல் என்ற பெயரால், உலக நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால், அமெரிக்க நிதிச்சந்தை நெருக்கடி மிக விரைவில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் நெருக்கடியாக மாற்றப்பட்டது. அமெரிக்காவின் நிதிச்சந்தை நெருக்கடியை தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து டாலர்கள் வெளியேறின. ஓரிரு வாரங்களுக்குள்ளேயே 13 பில்லியன் (1300 கோடி) டாலர்களை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் ஒரு பக்கம் பங்குச் சந்தை வீழ்ந்தது. மறுபக்கம் டாலருக்கு ஏற்பட்ட கிராக்கியால், டாலர் மதிப்பு உயரத் தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.



இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம் பதறாத நிதியமைச்சர் சிதம்பரம், பங்குச் சந்தை சிதறிய பொழுது பதறிப்போனார். பங்குச் சந்தை முதலீடுகளுக்கு நிதி தாராளமாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளின் கையிருப்பை பெருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இங்கு சற்று பின்னோக்கி பாருங்கள். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கிகளிலிருந்து இருப்பைக் குறைத்ததும் இவர்கள் தானே? அப்படியானால் பணவீக்கம் தீர்ந்துவிட்டதா?

அந்நிய மூலதனம் அதிகமாய் நுழைந்ததால் பணப்புழக்கம் அதிகரித்தது. அது பணவீக்கத்திற்கு இட்டுச் சென்றது. விலைவாசி எகிறியது. அதற்காக வங்கிகளின் கையிருப்பை குறைத்தார்கள். இப்பொழுது, அதே மூலதனம் வெளியேறும் பொழுது பணவீக்க நிலைமைகளில் மாற்றம் ஏதுமில்லாத போதும் கூட எதிர்த் திசையில் வேறு ஒரு நடவடிக்கை.
ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. டாலர் யானை புகுந்தாலும் நஷ்டம். வெளியேறினாலும் நஷ்டம்.

உண்மைப் பொருளாதாரத்தை அதாவது பொருளுற்பத்தியை நம்பாமல், நிதி மூலதனத்தை மட்டும் பயன்படுத்தி ஊக நடவடிக்கைகள் மூலமே எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. நெருக்கடியிலும் தனது டாலர் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும் சாதகமும், சாமர்த்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே உண்டு. உலகின் முதல் பெருங்கடனாளியான அமெரிக்கா, அதே வேளையில் நிகர மூலதன ஏற்றுமதியிலும் உலகில் முதலிடத்தை வகிக்கிறது. ஏகாதிபத்திய புலியைப் பார்த்து இந்தியப் பூனை கற்றுக்கொள்வதற்கு பாடங்களே இல்லையா?

உண்மை பொருளாதாரம் குறித்த அக்கறையை விட ஊகப் பொருளாதாரத்தின் மீது அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அதற்காக மாய்ந்து மாய்ந்து எடுக்கும் நடவடிக்கைகளிலும், காட்டும் அக்கறையிலும் அரை மடங்காவது பொருளுற்பத்திகாகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் காட்டினால், அதுவே உண்மையான சீர்திருத்தமாக இருக்கும். நாய் வாலை ஆட்டலாம். வால் நாயை ஆட்டலாமா?

(அனுமதியுடன்)

நன்றி - From : lightlink.wordpress.com

November 16, 2008

பங்குச் சந்தையும் குரங்கு கதையும்


அமெரிக்காவின் பங்குச் சந்தையில் நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தது தான், இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அமெரிக்கா கண்டிருக்கிறது.

இந்த ஊழலைப் புரிந்து கொள்ள பங்குச் சந்தையை பற்றிய சில அடிப்படைகள் நமக்கு புரிந்து இருப்பது அவசியம். கீழே வருகிற குட்டிக்கதை பங்குச் சந்தையின் சூதாட்டத்தை கொஞ்சம் புரிய வைக்க முயற்சிக்கிறது.

ஏற்கனவே நான் இந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். இனி வருகிற பதிவுகளை புரிந்து கொள்ள மிகவும் அவசியப்படும்.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி.

*******

2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.

தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.

இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்கக் கிளம்பினார்கள்.

கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...

இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.

குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய்ப் பார்த்து...

நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று அறிவித்துவிட்டு நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு கிளம்பினான் நகரத்துவாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபீசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் `இதற்கா இவ்வளவு கவலை....? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்...இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்று விட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான்.

அதைக் கேட்டவுடன்... அட...பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.

மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக... அங்கே...

குரங்குபிடி ஆபீசில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம்: `நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது. நாளை அது யாரிடமோ?' என்று.

இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...

ஆனா...

குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.

- பாமரன்

November 15, 2008

பங்குச் சந்தை சூதாட்டம்!



அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி எழுதப்படுகிற எல்லா கட்டுரைகளிலும்
பங்குச் சந்தை, பங்கு சந்தை சூதாட்டம், நிதி மூலதன கும்பல்கள், மூலதன வங்கிகள் என்ற வார்த்தைகள் தவறாமல் இடம்பெறுகின்றன.

ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில் பங்கு என்றால்?

ஒரு முதலாளி நிறுவனம் தொடங்க நினைக்கிறார். 10 லட்சம் முதலீடு தேவைப்பட்டால், தானே தனி நபராகவே தொடங்கிவிடுவார்.

இதுவே 20 லட்சம் என்றால், ஒருவரையோ இருவரையோ பார்ட்னராக சேர்த்து கொண்டு தொழில் தொடங்குவார்.

50 லட்சம் என்றால் ... தனக்கு தெரிந்தவர்களை சேர்த்து கொண்டு பிரைவேட் லிமிடெட்-யாக தொடங்குவார்.

இதுவே அந்த தொழிலுக்கு தேவை 100 கோடி என்றால்... அதை பொது நிறுவனமாக (Public Limited) பதிவு செய்து, மொத்த தேவையும், 10 ரூ அல்லது ரூ. 100 பங்குகளாக பிரித்து, வெளியிடுவார்கள்.

அதை யார் வேண்டுமென்றாலும், 10 எண்ணிக்கையோ, அல்லது 100. எவ்வளவு தேவையோ அவ்வளவு வாங்கி கொள்ளலாம்.

இப்படி ஒன்று சேர்த்த நிதியை கொண்டு, அந்நிறுவனம் இயங்கத் தொடங்கும். இந்த நிறுவனத்தின் நிதி பொதுமக்களுடையதாக இருப்பதால், இதற்கு அரசு தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். இந்நிறுவனத்தை கண்காணிக்க அரசு ஒரு ஐ.ஏ.எஸ். ஒருவரை நியமிக்கும்.

பிறகு, அந்நிறுவனம் உற்பத்தியில் ஈடுபடும். வருட இறுதியில் வருடாந்திர கணக்கு பார்க்கும் பொழுது, கிடைக்கிற லாபத்தை பங்குகள் ஒவ்வொருவரும் எவ்வளவு வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு பிரித்து தரப்படுகிறது.

கிடைக்கிற லாபத்தை வைத்து, கையில் வைத்திருக்கிற பங்கின் மதிப்பு உயருகிறது. வாங்கும் பொழுது ரூ. 10 யாக இருந்த பங்கின் மதிப்பு, பிரித்து கிடைத்த லாபம் ரூ. 5 என்றால், பங்கின் சந்தை மதிப்பு ரூ. 15. இப்படி வருடம் தோறும், கிடைக்கிற லாபம் கொண்டு பங்கின் மதிப்பு ஏறும்.

பங்கு சந்தை சூதாட்டம்

இப்படி வருடத்திற்கு ஒருமுறை பங்கின் மதிப்பு ஏறும். அரசின் தொழிற்கொள்கை முடிவுகளில், எதிர்காலத்தில் அந்த குறிப்பிட்ட தொழிலில் ஏற்படும் சில மாற்றங்களில், பங்கின் விலை ஒரு பாய்ச்சலில் ஏற வாய்ப்புண்டு. மற்றபடி பாய்ச்சலில் ஏற வாய்ப்பேயில்லை.



ஆனால், பல நிறுவனங்களின் பங்கு விலையை 300 என சந்தை மதிப்பு 400, 500 என செயற்கையாய் ஏற்றி, இறக்கி குறைந்த காலத்தில் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். சிலர் அதால பாதாளத்தில் வீழ்கிறார்கள். நடுத்தர வர்க்கம் தனக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடிக்கும் ஆசையில், சிறுக சிறுக சேமித்த பணத்தை பங்குச் சந்தையில் ஏமாறி தோற்கிறது.

பங்குச் சந்தை தரகன் ஹர்சத் மேத்தாவின் ஊழல் – 700 கோடி (என் நினைவில்) என்றார்கள். இந்த ஊழலைப் பற்றி அந்த சமயத்தில் ஒரு நிபுணர் இது குறித்து சில தகவல்களை சொன்னார்.

ஹர்சத் மேத்தா, பல வங்கி மேலாளர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தைத் திரட்டி, ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 300 என்றால், கையில் உள்ள பெரும் பணத்தை வைத்துக் கொண்டு, அந்த நிறுவனத்தின் பங்குகளை 310, 320 என வாங்கத் தொடங்குவான். சேகரிக்க, சேகரிக்க தொடர்ச்சியாய் இந்த பங்குகளின் விலை சந்தையில் ஏறத் தொடங்கும். இப்படி ஏறத் தொடங்கிய பங்கின் விலை குறிப்பிட்ட காலங்களில் 400 என ஏறி நிற்கும் பொழுது, சேகரித்த பங்குகளையே ஹர்சத் மேத்தாவே சந்தையில் விற்கத் தொடங்குவான். இப்படித்தான் தொடர்ச்சியாக நடக்கிறது பங்குச் சந்தை ஊழல். ஹர்சத் மேத்தாவோடு பல வங்கி நிர்வாகிகளும் மாட்டினார்கள்.

என்ன பாலிஷாக சொன்னாலும், இது சூதாட்டம் தான். இந்த சூதாட்டத்தைத் தான், எல்லா முதலாளித்துவ அரசுகளும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன.

பங்குச் சந்தை சூதாட்டம் – நான் சொன்ன முறை மிக பழைய முறை. அமெரிக்கா முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியமாயிற்றே! ஆகையால், இந்த சூதாட்ட முறையின் பரிணாம வளர்ச்சியில் நடந்த மிகப்பெரிய சூதாட்டத்தை நடத்தியது. அதனால் தான், இப்படி மாபெரும் நெருக்கடியில் அமெரிக்க அரசு சிக்கியுள்ளது. அந்த சூதாட்டத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பு : நான் சார்ந்த துறை வணிகம். ஆகையால், செய்திகளைச் சேகரித்து நான் எழுதுகிறேன். இது ஒரு எளிய அறிமுகம். பங்குச் சந்தை குறித்து விரிவாக, ஆழமாக பிறகு எழுதுகிறேன். சில பதிவர்கள் இதில் நிபுணத்துவம் இருக்கலாம். நீங்களும் கருத்து சொல்லலாம்.

முதலாளித்துவ பொருளாதாரம்!

இன்றைக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவலாகி நிற்கின்றன. சந்தை சுதந்திரத்தை வலியுறுத்தி பல கோடிகளை சுருட்டிய முதலாளித்துவம் (முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் - ஏகாதிபத்தியம்) இவ்வளவு காலம் தண்ணீர் தொட்டிக்குள் நின்று கொண்டிருந்தது. தண்ணீர் இறங்கியதும் அதன் அம்மணத்தை உலகம் இன்றைக்கு பார்த்து காறித்துப்புகிறது.

முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலேயே எல்லா கோளாறுகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். அந்த வரிசையில் முதலில் ...

முதலாளித்துவ பொருளாதாரம்

நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணங்களாய் வரையறுப்பது.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு

கவனியுங்கள்
- மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் – இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால், பல்வேறு தொழில்களை நடத்தி வரும் முதலாளிகளின் கைகளுக்கு லாபம் போகிறது. உற்பத்தி அதிகமானால், ஏற்றுமதி அதிகமாகும். அதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகும். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு எதுவும் கிடைக்க என்ன இருக்கிறது.

பங்குச் சந்தை மதிப்பு உயர்வது, உண்மை மதிப்பு அல்ல! காகித மதிப்பு தான். சூதாடிகள் செயற்கையாக ஏற்றுகிறார்கள், இறக்க வைக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்களில் இவர்கள் ஊக பேர வணிகத்தில் விளையாடி, கொள்ளையடித்து விலையை ஏற்றிவிடுகிறார்கள்.

• நிதி நிறுவங்களின் லாபம் - ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு நிறுவனமும் கணக்கு காட்டுகிறார்கள். 99% நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை 10% தான் காட்டுகின்றன. நட்ட கணக்கு கூட காண்பிப்பார்கள். அதில் வேறு சங்கடங்கள் இருப்பதால், தவிர்க்க முடியாமல், லாப கணக்கு காண்பிக்கிறார்கள். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு, பல மான்யங்களை அள்ளி வழங்குகின்றன. ஆனால், லாப வெறி கொண்ட பன்னாட்டு நிறுவங்கள் தனது லாபத்தை குறைத்து காட்டுகின்றன. தில்லியில் தணிக்கையாளர்களுக்கான நடந்த சிறப்பு கூட்டமொன்றில் நிதியமைச்சர் சிதம்பரம் இது குறித்து நிறைய வருத்தப்பட்டார்.(!)

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி!



ஆகஸ்ட் 2008 ல் அமெரிக்காவில் பான்னி மே, பிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் மஞ்சள் கடிதாசி கொடுக்க, அமெரிக்க அரசு பதறிப்போய் அரசுடைமையாக்கியது. அடுத்து அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் என்ற காப்பீட்டு நிறுவனம் திவாலின் விளிம்பில் நிற்க, இதன் 80% பங்குகளை அமெரிக்கா மக்கள் கொடுத்த வரிப்பணத்தில் வாங்கி காப்பாற்றியிருக்கிறது.



தனியார்மயம், தாராளமயம், உலகமயம் – தான் அருமையான பொருளாதார கொள்கைகள். இதை அமுல்படுத்தினால், நாடுகள் சொர்க்க பூமியாகும் என்று உலக நாடுகள் முழுவதும் வலுக்கட்டாயமாக திணித்து பல நாடுகளை திவலாக்கி கொண்டிருந்த அமெரிக்கா இன்றைக்கு அதுவே திவலாகி நிற்கிறது.

**

நமது மொத்த நாடும் ஆபத்தில் இருக்கிறது. அரசு நிதி கொடுத்து உதவாவிட்டால், வீடு ஜப்தி நடக்கும். தொழில் முடங்கும். - இன்றைய அமெரிக்க அதிபர் புஷ் அறிவிக்கிறார்.

நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. – தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற புதிய ஜனாதிபதி ஒபாமா சொல்கிறார்.

**

அமெரிக்க வீழ்ச்சியின் பாதிப்பு உலகம் முழுவதிலும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவில், பல நிறுவனங்கள் தன் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை பாதியாய் குறைத்து இருக்கின்றன. காரணம் சொல்லப்படாமலே, பலரை வேலையிலிருந்து தூக்கி எறிந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், “ எல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன” என சிதம்பரம் சொல்கிறார். சொன்ன மறுநிமிடமே வங்கிகள் வாங்கிய பணத்துக்கு ரிசர்வ் வங்கியிடம் வட்டி விகிதத்தை குறைக்கவும், வங்கிகளின் பண இருப்பை குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டியிருக்கிறார்.

இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு காரணமாய் ... அமெரிக்க மக்கள் தங்களுடைய வீட்டுக் கடனை கட்டாதது தான் காரணம் என்கிறார்கள். முதலாளிகளும், அமெரிக்க வங்கிகளும், நிதி மூலதன ஆதிக்க கும்பல்களும், பங்கு சந்தை சூதாடிகளும், சேர்ந்து கொள்ளையடித்து விட்டு, மக்கள் மீது பழி போடுகிறார்கள். இதை புரிந்து கொள்ள முதலாளித்துவம், பங்குச் சந்தை, நிதி மூலதனம் பற்றியெல்லாம் கொஞ்சம் விளங்கி கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாய் தேடுகிற பொழுது, சில நல்ல கட்டுரைகள் உதவின. நான் தொகுத்ததை எளிமையாக எழுத முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு சில கட்டுரைகளை படித்து விடுவது நல்லது.

***

இந்த கட்டுரை கச்சா பேரல் விலையில் அமெரிக்காவின் பங்கு குறித்து விவாதிக்கிறது. கச்சா பேரல் விலை 140 டாலர் இருக்கும் பொழுது, இந்த கட்டுரை வெளிவந்தது.

இன்றைக்கு கச்சா பேரல் விலை 60 டாலருக்கும் கீழாக இறங்கியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. 140 டாலராய் இருக்கும் பொழுது, பலமுறை விலை ஏற்றிய இந்திய அரசு, இன்றைக்கு இறங்கி நிற்கும் பொழுது, விலையை குறைக்க மறுக்கிறது.

ஏறியிருக்கும் பொழுது, நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தன. இறங்கி நிற்கும் பொழுது, இந்திய அரசு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.


எண்ணெயில் விளையாடும் அமெரிக்கா!

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.


ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).


இவ்வளவு ஏன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிரந்தர துணைக் குழுவொன்று எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்வுக்கும் சந்தை சூதாட்டத்திற்கும் இடையேயுள்ள உள்ள தொடர்பை ஆராய்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இணைய தளம் வழியாக நடைபெறும் சூதாட்ட வர்த்தகம், எண்ணெய் விலையைக் கணிசமான அளவு உயர்த்தியிருப்பதை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியம் இருப்பதாக''க் குறிப்பிட்டுள்ளது. (ஃபிரண்ட்லைன், ஜூலை 4, பக்:19)


திருடனுக்குத் தேள் கொட்டினால் அலறவா முடியும்? அதனால் அமெரிக்க அரசும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் இந்த அறிக்கை பற்றி மூச்சு விடாமல் மூடி மறைத்துவிட்டனர். "எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சந்தையின் தேவையைவிடக் குறைவாகக் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருவதும்; இந்தியா மற்றும் சீனாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதும்தான் விலை உயர்வுக்குக் காரணம்'' என்பதுதான் அமெரிக்காவின் வாதம். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் அமெரிக்காவிற்குப் பின்பாட்டு பாடி வருகின்றன.


ஒரு முழுப் பொய்யைவிட அரைகுறை உண்மை ஆபத்தானது என்பார்கள். அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து அளித்துவரும் விளக்கம் அந்த ரகத்தைச் சேர்ந்தது.


2007ஆம் ஆண்டில், இந்தியாவும் சீனாவும் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு, 2006ஆம் ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்தது உண்மைதான் என்றாலும், அமெரிக்காவோடு ஒப்பிட்டால், இந்தியா, சீனாவின் கச்சா எண்ணெய் நுகர்வு குறைவானதுதான். உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில், இந்தியா ஏறத்தாழ 3 சதவீதமும்; சீனா 8 சதவீதமும்தான் பயன்படுத்துகின்றன. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இதற்கு மேல் கச்சா எண்ணெய் நுகர்வைக் கோரவில்லை. ஆனால் பொருளாதார மந்தத்தில் சிக்கிக் கொண்டுள்ள அமெரிக்காவோ உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 24 சதவீதப் பங்கை நுகர்ந்து தள்ளுகிறது.


அமெரிக்க அரசின் எரிசக்தித் தகவல் நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008ஆம் ஆண்டில் சர்வதேச கச்சா எண்ணெய் தேவை, உற்பத்தியைவிட 1.2 சதவீதம்தான் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. தேவை இவ்வளவு குறைவாக உயரும் என எதிர்பார்க்கப்படும் பொழுது, 2008ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே கச்சா எண்ணெயின் விலை 140 சதவீதம் அதிகரித்துவிட்டது.


இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, தேவையைவிட உற்பத்தியைக் குறைத்துவிடுவது முதலாளித்துவ பொருளாதாரத்தில் புதிய விசயமல்ல. குறிப்பாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 200 அமெரிக்க டாலரைத் தாண்டிப் போகும் எனப் பீதி கிளப்பப்படுவதால், கச்சா எண்ணெயைத் தோண்டியெடுக்கும் நாடுகள் அனைத்துமே இந்தத் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தத் தில்லுமுல்லைக் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருப்பதைப் போல அமெரிக்கா தன்னைக் காட்டிக் கொள்வதுதான் வேடிக்கையானது.


கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியா, அமெரிக்காவின் அடியாள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஆனாலும், அமெரிக்கா தேவைக்கு ஏற்ப உற்பத்தியைக் கூட்டச் சொல்லி சவூதி அரேபியாவிற்குக் கட்டளை போட மறுக்கிறது. இப்படிக் கட்டளை போடுவது சுதந்திர வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றால், அமெரிக்கா தனது சொந்த நாட்டில் இதுவரை தோண்டி எடுக்காமல் இருக்கும் கச்சா எண்ணெயை எடுத்து, சந்தையில் கொட்டப் போவதாக ஒரு மிரட்டலாவது விட்டிருக்கலாம். அதையும் செய்ய மறுக்கிறது, அமெரிக்கா.


டாலர் மதிப்புச் சரிவு, பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு இன்னுமொரு தலைவலியாகத் தானே இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அமெரிக்க ஆளும் கும்பலோ கச்சா எண்ணெய் விலை உயர்வை வாராது வந்த மாமணியாகத்தான் பார்க்கிறது; வீட்டுக் கடன் பிரச்சினையால் நட்டமடைந்துள்ள அமெரிக்க வங்கிகளும், நிதி ஆதிக்கக் கும்பலும் கச்சா எண்ணெய் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொண்டுக் கரையேறிவிட முயலுவதால், கச்சா எண்ணெய் விலை சரிந்துவிடக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.



சொல்லப் போனால், இந்த விலை உயர்வைத் தொடங்கி வைத்ததே அமெரிக்காவின் ஈராக் மீதான மேலாதிக்கப்போர்தான். ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்கு முன்பாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 25 டாலராக இருந்தது. இது, சனவரி 2004க்கும் ஏப்ரல் 2007க்கும் இடைபட்ட காலத்தில் 65 டாலராக உயர்ந்தது. அடுத்த ஒரே ஆண்டிற்குள் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 145 டாலரைத் தொட்டது. இவ்விலை உயர்வினால் சவூதி அரேபியா, ஈரான், ரசியா, நைஜீரியா, குவைத் உள்ளிட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மட்டுமல்ல, எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்த இலாபம் அடைந்து வருகின்றன.


உலக எண்ணெய் வளத்தில் ஏறத்தாழ 25 சதவீதப் பங்குகள் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் எக்ஸான்மொபில் என்ற நிறுவனத்திற்கு மட்டும், உலகின் 21 நாடுகளில் எண்ணெய் வயல்கள் சொந்தமாக உள்ளன. சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் 1 கோடி பீப்பாய் எண்ணெயைத் தோண்டி எடுக்கிறது என்றால், எக்ஸான்மொபில் பல்வேறு நாடுகளில் உள்ள தனது எண்ணெய் வயல்களில் இருந்து ஏறத்தாழ 68 இலட்சம் பீப்பாய் எண்ணெயை உறிஞ்சிக் கொட்டுகிறது. எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவின் ஆதிக்கம் நிலவுவதைச் சுட்டிக் காட்டும் சிறிய உதாரணம் இது. எதிர்காலப் பயன்பாட்டுக்காக, அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களைப் பயன்படுத்தாமல், பாதுகாத்து வருவது தனிக்கதை.


எண்ணெய் விலையேற்றத்தால், எக்ஸான்மொபிலின் கடந்த ஆண்டு இலாபம் நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. எக்ஸான்மொபில், செவ்ரான்க்ராப், கோங்கோபிலிப்ஸ் உள்ளிட்ட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்க அரசிற்கு கடந்த ஆண்டு வரியாக மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாயைக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.


சவூதி அரேபியாவிற்கு அடுத்து எண்ணெய் வளம் நிறைந்த நாடு ஈராக்தான். ஈராக்கில், இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வளம் ஏராளம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சதாம் ஆட்சியின்பொழுது, நாட்டுமையாக்கப்பட்டிருந்த எண்ணெய் வயல்கள், ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பிறகு அமெரிக்கமயமாக்கப்படுகின்றன. போரில் சதாமை வீழ்த்தி பாக்தாத் நகருக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், சதாம் பதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தேடி அலையவில்லை. மாறாக, ஈராக்கின் எண்ணெய் அமைச்சரவை அலுவலகத்திற்குள் நுழைந்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன. "ஷெல்'' எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிலிப் கரோலை எண்ணெய் அமைச்சரவையின் ஆலோசகராக நியமித்தது, அமெரிக்கா.


ஈராக்கில், குர்து இன மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக 20 ஒப்பந்தங்களை அமெரிக்கா போட்டுக் கொண்டுள்ளது. தற்பொழுது ஈராக்கின் தெற்கே, சன்னி மற்றும் ஷியா முசுலீம்கள் வாழும் பகுதிகளில் உள்ள மிகப் பெரும் எண்ணெய் வயல்கள், அமெரிக்காவின் எக்ஸான்மொபில், ஷெல்; பிரிட்டனின் பிரிட்டிஷ் பெட்ரோலியம்; அமெரிக்கபிரான்சு கூட்டு நிறுவனமான டோட்டல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.


இந்த எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுக்க ரசியா, சீனா, இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 46 நிறுவனங்கள் ஈராக் பொம்மை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தன. ஆனால், இந்த நான்கு நிறுவனங்களைத் தவிர்த்து, பிற நாட்டு நிறுவனங்கள் போட்டியிட அனு மதிக்கப்படாமல், குத்தகை முடிவு செய்யப்பட்டது. ஈராக் பொம்மை அரசு இந்த நான்கு நிறுவனங்களுக்குத் தர வேண்டிய இலாப ஈவுத் தொகை, தொழில்நுட்ப ராயல்டி தொகை ஆகியவற்றைப் பணமாக இல்லாமல், கச்சா எண்ணெயாகத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.




இப்படிப்பட்ட நிலையில், கச்சா எண்ணெயின் விலை மீண்டும் பழைய நிலைக்கு — ஒரு பீப்பாய் 25 அமெரிக்க டாலருக்கு உடனடியாகச் சரிந்துவிட அமெரிக்கா அனுமதிக்குமா? "தற்பொழுது புழக்கத்திலுள்ள எண்ணெய் வயல்கள் அனைத்தும் வயது முதிர்ந்து விட்டன; அதனால் உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை'', "உலகின் எண்ணெய்த் தேவையும் உற்பத்தியும் உச்சத்தை எட்டிவிட்டன; அதனால் உற்பத்தியை இதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை'', "புதிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிப்பதும், உருவாக்குவதும் உடனடியாக சாத்தியமில்லை'', எனப் பல்வேறான ஆய்வு அறிக்கைகளை மாற்றி மாற்றி வெளியிடுவதன் மூலம், கச்சா எண்ணெய் சந்தை ஒரு பரபரப்பு நிலையிலேயே இயங்க வைக்கப்படுகிறது. இதன் மூலம், கச்சா எண்ணெயின் விலை தடாலடியாகச் சரிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.


குறிப்பாக, கச்சா எண்ணெய் மீது நடைபெற்று வரும் முன்பேர ஊக வாணிபம் இரண்டு வழிகளில் அமெரிக்காவுக்குப் பயன்படுகிறது. செயற்கையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயின் விலை, தடாலடியாகச் சரிந்து விடாமல், ஊக வாணிபம் மூலம் முட்டுக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவதாக, வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கி நட்டமடைந்துள்ள அமெரிக்க வங்கிகளும், பல்வேறு நிதி நிறுவனங்களும் உடனடி இலாபம் ஈட்டுவதற்கான வழியாக இதனைத் தேர்ந்து எடுத்துள்ளன.


எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தின் மதிப்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை 1,300 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 62,000 கோடி) இருந்தது. அது, இன்று ரூ. 10,40,000 கோடி ரூபாயாக வீங்கிப் போய் விட்டது. இந்த வீக்கம்தான், 60 சதவீத கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. (தி ஹிந்து, 3.7.08)


அத்தியாவசியப் பண்டங்களின் மீது நடைபெறும் இந்த முன்பேர வர்த்தகம், அமெரிக்காவின் நியூயார்க் வாணிபச் சந்தையிலும்; இலண்டனில் உள்ள "இண்டர்காண்டினேன்டல் சந்தையிலும்'' தான் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சந்தைகளும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படாமல், "சுதந்திரமாக'' இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்தெந்த நிறுவனங்கள் ஊக வாணிபத்தில் பங்கு பெறுகின்றன? எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றன? என்பதெல்லாம் மர்மமாகவே இருப்பதாக முதலாளித்துவ பத்திரிகைகளே புலம்புகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, சிட்டி குரூப், ஜே.பி.மார்கன் சேஸ் ஆகிய நான்கு நிதி நிறுவனங்கள்தான் இந்தச் சூதாட்டத்தில் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே நடைபெற்று வருவது, அமெரிக்காவுக்கு மிகவும் சாதகமான அம்சம். எண்ணெய் வர்த்தகம் மூலம் அரபு ஷேக்குகளுக்குக் கிடைக்கும் அமெரிக்க டாலரின் பெரும்பகுதி, அமெரிக்க வங்கிகளிலும், அமெரிக்க அரசு வெளியிடும் பத்திரங்களிலும் தான் முதலீடு செய்யப்படுகிறது. "பெட்ரோ டாலர்'' என்று அழைக்கப்படும் இந்த முதலீடு, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் கேடயமாகப் பயன்படுவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. எனவே, அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்துப் புலம்புவதெல்லாம் வெறும் நாடகம்தான். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையை 200 அமெரிக்க டாலராக ஊதிப் பெருக்க வைப்பதுதான் அமெரிக்காவின் உள்ளார்ந்த நோக்கம்!


· ரஹீம்

புதிய ஜனநாயகம் (செப்-2008)

(அனுமதியுடன்)