> குருத்து: தேர்தல் - 2009

April 15, 2009

தேர்தல் - 2009


பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
பல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
பொய்யின் முகத்தில்
சவக்களை.

மாற்றம்... இன்னும்
தொலைவில் இல்லை

பின்குறிப்பு : நான் எழுதிய "சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை" என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. அந்த கவிதையை மீண்டும் படித்துப்பார்த்தால்... இந்த தேர்தலுக்கும் பொருந்துவருகிறது. ஆகையால் மீள்பதிவு செய்திருக்கிறேன் சில மாற்றங்களுடன்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

good

kalagam said...

உண்மைகள் கரிக்கின்றன


உண்மைகள் கரிக்கின்றன
எத்தனை சொம்பு
தண்ணீர் குடித்தாலும்
உண்மைகள் கரிக்கத்தான் செய்யும்....
பொய்கள் இனிக்கும்
தின்று கொழுத்து வீங்கிய
வயிறுகள் பொய்களை குறைக்க
அணிவகுக்கின்றன சுகர் ப்ரீ சென்டருக்கு.....

இனிப்பதனால் பொய்கள்
உண்மையாகிவிடாது கரிப்பதனால்
உண்மையும் பொய்யாகிவிடாது......

என்னதான் முக்கினாலும்
பொய்களால் கரிப்பை ஜெயிக்க முடிவதில்லை
ஆதிக்கசாதியின் மூத்திரத்தில்
தொடங்கி விவசாயியை குடித்த
யூரியா வரை எல்லாம் கரிக்கத்தான்
செய்கிறது.........

என்ன செய்வது
வாயில் கரிப்பை வைத்துக்கொண்டு
எங்களால் பொய்யாய்
சிரிக்கத்தெரியவில்லை.....


எலிமருந்தில் மூவர்ண தேனைத்தடவி
வருகிறார்கள்
ம்!
எல்லோரும் நாக்கை நீட்டுங்கள்
நக்காதவன் எல்லாம் தேசத்துரோகிகள்.



தோழர் குருத்து அவர்களின் கவிதையை படித்தவுடன் எழுதிய கவிதை இது

http://kalagam.wordpress.com/