> குருத்து: பின்னலாடை நகரில் பெருகி வரும் தற்கொலைகள்!

July 15, 2010

பின்னலாடை நகரில் பெருகி வரும் தற்கொலைகள்!

திருப்பூர் : பின்னலாடை உற்பத்தியின் மூலம் அன்னியச் செலாவணியை அதிகளவில் ஈட்டி வரும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தற்போது தற்கொலைகள் பெருகி வருகின்றன.

கடன் தொல்லை, குடும்ப உறவுகளில் விரிசல், கலாசார சீரழிவுகளால் அதிகரித்து வரும் இத் தற்கொலைகளை தடுக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

÷ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி, உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி என பின்னலாடை உற்பத்தி தொழில் மூலம் பெருமளவில் வருவாயைக் குவித்து வரும் திருப்பூர் மாவட்டம் தற்கொலைகளிலும் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் 491 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 307, பெண்கள் 165, மாணவியர் 13, மாணவர்கள் 8 பேர் அடங்குவர்.

சராசரியாக 50 தற்கொலைகள்...: இதேபோல், நடப்பாண்டில் கடந்த ஜூன் வரையிலும் 302 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 183, பெண்கள் 99, மாணவிகள் 14, மாணவர்கள் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி, சராசரியாக மாதம் 40 முதல் 50 தற்கொலைகள் நடைபெறுகின்றன. இது போன்று தற்கொலை செய்யவர்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும், குறிப்பாக ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் மாவட்ட காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ÷மேலும், இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்கள் தூக்கு போடுதல், விஷம் குடித்தல், சாணிப்பவுடர் உள்ளிட்டவற்றையே அதிகளவில் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

÷இதுபோன்ற தற்கொலைகளுக்கான காரணம் குறித்து சேவ் தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஆ.அலோசியஸ் கூறுகையில், தொழில் வளமுள்ள இம்மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வந்து கொண்டுள்ளன. அதில், குறிப்பிடும்படியாக தென் மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமப்புற குடும்பத்தினரே அதிகம்.

கந்து வட்டிக் கொடுமை...: அவ்வாறு, திருப்பூர் நிறுவனங்களில் அவர்கள் இரவு, பகலாக உழைத்துச் சம்பாதித்தாலும் ஈடுகட்டமுடியாத செலவுகளும் இங்கே உள்ளன. ஏற்கெனவே, பல்வேறு கடன் சுமைகளில் திருப்பூர் வந்து வேலை பார்க்கும் அவர்களால் இந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் தோல்வி நிலையை அடைகின்றனர். இதன் விளைவு கந்து வட்டிக் கொடுமை, குடும்பத்தில் விரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி இறுதியில் தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.

÷இது போன்ற தற்கொலைகளை தடுக்க திருப்பூரில் நிரந்தரமாக மனநல ஆலோசனை மையங்கள் துவங்கி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர, அயல்நாடுகளில் உள்ளதுபோல் ஹெலப் லைன் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தி தற்கொலை நிலையில் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கலாம் என்றார்.

அதிகரிக்கும் கள்ளத் தொடர்புகள்...: பெருகி வரும் தற்கொலைகள் குறித்து ஆராய மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

÷இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் மேற்கொண்ட ஆய்வில், பெருகியுள்ள கள்ளத் தொடர்புகள், வறுமை, குடும்ப

உறுப்பினர்களிடையே விட்டுப்போன அன்பு பறிமாற்றம் போன்றவையே தற்கொலைகள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தை குறைக்க...: தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க காவல்துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டன. அம்முகாம்கள் கடந்த பல மாதங்களாக நடத்தப்படுவதில்லை. இப்பிரச்னையின் வீரியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் தற்கொலைகள் தடுப்பு மனநல ஆலோசனை மையங்கள் துவக்கி செயல்படுத்த வேண்டும்.

÷தவிர, தொழிலாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை நல்வழியில் செலவிட்டு மனஅமைதியை ஏற்படுத்திக்கொள்ள திருப்பூர் மாவட்டத்தில்

ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களை கூடுதலாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்பது சமூகநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

நன்றி : என். தமிழ்ச்செல்வன், தினமணி, 13/07/2010

பின்குறிப்பு : கோடிக்கணக்கில் அந்நிய செலாவணி ஈட்டும் திருப்பூரில் தொழிலாளர்கள் தற்கொலையில் சாகிறார்கள் என்றால்.. வலுவான காரணம் இருக்கத்தான் வேண்டும்.

7,8 ஆண்டுகளுக்கு முன்பே, திருப்பூரில் சில காலம் தங்கி இருக்கிறேன். அங்கு உள்ள விலைவாசி பெருநகர சென்னைக்கு ஈடானது. வாடகையும் கூட அப்படித்தான். இப்பொழுது உள்ள விலைவாசி உயர்வு பிரச்சனையில், அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

தமிழகம் தழுவிய அளவில் தலைநகரம் சென்னைக்கு வேலை இல்லாமல் இடம்பெயர்கிறார்கள் என்றால், தென்தமிழக அடித்தட்டு மக்களுக்கு திருப்பூர் தான் கதி.

அங்கு ஒரு சிப்ட் என்பதே 12 மணி நேரம் தான். மற்றபடி கூடுதல் வேலை செய்தால் தான், வாழ்க்கையை ஒட்ட முடியும். தொழிலாளர்கள் இருக்கும் பகுதி என்றாலே, கந்து வட்டி கும்பலும் நிச்சயம் இருக்கும். தொழிலாளர்களின் நெருக்கடியான வாழக்கையில், அவசரத்திற்கு பணம் தருவது. பிறகு, அநியாய வட்டி வாங்குவது என தொடர்வார்கள். கந்து வட்டி கும்பலுக்கு, அனைத்து கட்சி பிரமுகர்கள், போலீஸ் எல்லாம் உடந்தை தான்.

பிரச்சனைக்கு தீர்வு என்பது தினமணி செய்தி சொல்வது போல, ஆலோசனை, ஹெல்ப்லைன் தீர்வாகாது. அதெல்லாம் வெறும் கண்துடைப்பு. தொழிலாளர்கள் சங்கமாய் ஒன்றுப்பட்டு தங்கள் சகல பிரச்சனைகளுக்காகவும் போராடாமல், இந்த தற்கொலைகளை தடுக்க முடியாது. எங்கள் பகுதி நெசவு தொழிலாளர்கள் பகுதி தான். எப்பொழுதெல்லாம், புரட்சிகர அமைப்புகள் பகுதியில் வலுவாக இருந்தனவோ, அப்பொழுதெல்லாம் கந்துவட்டி பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறைவாக இருந்தன.

அங்கு இயங்கும் கழக, போலி கம்யூனிச தொழிற்சங்கங்கள் தொழிலாளர் பிரச்சனைகளை தீர்த்துவிடாது. தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நேர்மையாக போராடக்கூடிய ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தான் அதற்கு ஒரே தீர்வு.

0 பின்னூட்டங்கள்: