> குருத்து: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!*

August 20, 2010

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!*


பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.
அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.

முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!
மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?

நன்றி : தினமணி தலையங்கம் - 19/08/2010

பின்குறிப்பு : தினமணியின் தலையங்கத்தில் 'ஒரு மரத்து பறவைகள்" என சாந்தமாக தலைப்பு தந்திருந்தார்கள். பொருத்தமாக சொல்ல வேண்டுமென்றால்..."ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்" என்ற தலைப்பு தானே பொருத்தமாக இருக்கிறது. அதனால் தான் மாற்றி வைத்தேன்.

1 பின்னூட்டங்கள்:

ஏகலைவன் said...

”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!” என்கிற தலைப்பினைவிட ஒரே குட்டையில் உழலும் பன்றிகள் என்றும் பெயர் சூட்டியிருக்கலாம். நமது ஆசான் லெனின் பானியில் சொன்னால் பாராளுமன்றம் எனும் பன்றித்தொழுவத்தில் உழன்றுகொண்டிருக்கும் பன்றிகள்தான் இந்த ஓட்டுக்கட்சிகள் என்பது தெளிவாகிறது.

காங்கிரசு, பா.ஜ.க. மட்டுமின்றி அக்மார்க் மார்க்சிஸ்டுகளான இடது, வலது போலிகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

யூனியன் கார்பைடையும் அதன் இப்போதைய கொலைமுகமான டௌ கெமிக்கல்ஸையும் ஆரத்தழுவி வரவேற்பதில் காங்கிரசு, பா.ஜ.க. கட்சிகளுக்கு சற்றும் சளையாமல் நடந்துகொண்டது சி.பி.எம்.

டௌ கெமிக்கல்ஸிடம் பெற்ற கூலிக்கு நூற்றுக்கணக்கான நந்திகிராம விவசாயிகள் பலியிடப்பட்டிருந்தனர். அவ்விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களை துப்பாக்கி முனையில் வளைத்து பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை டௌ கெமிக்கல்ஸுக்கு வழங்கப் பாடுபட்டது போலி மார்க்சிஸ்டு அரசு.

உங்கள் கட்டுரையில் வடிவமும் தகவல்களும் அருமை. வாழ்த்துக்கள்!