> குருத்து: தோழர் மருதையன் வாழ்த்துரை! - (தொடர்ச்சி)

August 15, 2011

தோழர் மருதையன் வாழ்த்துரை! - (தொடர்ச்சி)


வாழ்த்துரை - முதல் பதிவு

தொடர்கிறது.

****

இந்த மணவிழாவில், மணமக்கள் உறுதிமொழி வாசிப்பார்கள். "பொதுநலனுக்கு உட்படுத்தி, எங்களது குடும்ப வாழ்க்கை வாழ்வோம்! மணமகன் ஆணாதிக்கம் இல்லாமல் நடந்துகொள்வேன் என சொல்வார். இந்த இரண்டு விசயங்களும் அமுல்படுத்துவது மிக சிரமமானது.

ஏனென்றால், ஆணாதிக்கம் என்பது கிட்டத்தட்ட இரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஆணாதிக்கம் என்றால் என்ன? என ஒரு ஆணைக் கேட்டால் அதிகபட்சமாக சொல்வது "போடி! வாடின்னு பேசக்கூடாது! கை நீட்டி அடிக்க கூடாது. இப்படி மூணு, நாலு சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்வளவு தான் ஆணாதிக்கம். மற்றபடி உட்கார்ந்தபடி கைநீட்டி டீ கேட்பது; காலாட்டி உட்கார்ந்து கொண்டு, மனைவி தான் தண்ணீர் தூக்கனும்; வேலை செய்ய வேண்டும் என நடந்து கொள்வது ஆணாதிக்கத்தின் வடிவம் என ஒரு ஆண் கருதுவதில்லை.

அதுபோல, பெண்ணும் கூட பெண்ணடிமைத்தனத்தை, ஜனநாயக உணர்வு கொண்ட பெண்கள் கூட இயல்பாக பல பெண்ணடிமை கருத்துக்களை, நடவடிக்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் நுட்பமான முறையிலே கவனித்து, இரண்டு பேரும் அதை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணாக இருக்கட்டும்! பெண்ணாக இருக்கட்டும்! கணவன், மனைவியருக்கிடையே அல்லது நண்பர்களுக்கிடையே எழும் முரண்பாடாகட்டும் அதில், எது அடிப்படையாக அமைகிறது என்றால், நம்மீது மனைவியோ, நண்பர்களோ ஒரு தவறை நம்மீது சுட்டி காட்டும் பொழுது, தவறு என தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது தான்! தவறு என தெரியாமல் இருந்தால் அது வேறு விஷயம். தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது; அதில் வீம்பாக நின்றுகொண்டு, நியாயப்படுத்தி வாதம் செய்வது! இதுதான் உறவுகள் சிதைவதற்கு அடிப்படை!

இதை நாம் எப்பொழுது களைந்து கொள்வோம்? இவையெல்லாம் களைந்து கொள்ள வேண்டிய தவறுகள் என ஒரு ஒப்புக்கொள்ள (Conviction) வேண்டும். இரண்டாவது, முக்கியமாக ஆண்களுக்கு, தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்கிற, தான் இரட்டை வேடக்காரனாக இருக்கிறேன் என்று தன்னைத் தானே சிரித்துக்கொள்கிற பக்குவம் வேண்டும். மனைவி சொன்னால், தான் அப்படித்தான் இருக்கிறேன் என உணரவேண்டும். இப்படி இருக்கும் பொழுது தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.

இரண்டாவதாக, தன்னுடைய சொந்த வாழ்க்கையை சமூக நலனுக்கு உட்படுத்துவது. அப்படி ஒரு பொதுவாழ்க்கைக்கு சொந்த வாழ்க்கையின் இன்பங்களை விட்டுக்கொடுக்க தயாராய் இருப்பது! இதை செய்வது மிக கடினம். சொந்த வாழ்க்கையில் தனக்கு வசதி, வாய்ப்பு சாத்தியமென்றாலும், அது வேண்டாம் என்று தள்ளுகிற பக்குவம் வரவேண்டும்.

பொதுநலனின் பொருட்டு இந்த வசதிகளை நாம் அனுபவிக்க கூடாது அது ஒரு அறம் கொன்ற செயல் என உணர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிற ஒரு நாட்டில், வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கிறது என்றாலும், அனுபவிப்பது என்பது அநாகரிகம் என்று கருதுகிற பக்குவத்தில், அதை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில், ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள துணிந்திருப்பது என்பது முக்கியமானது.

மேலும், குழந்தை இருக்கிறது என்றால், அதை எப்படி வளர்க்க வேண்டும்? அந்த குழந்தைக்கு செய்து கொடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் என்ன? எவற்றுக்கு அந்த குழந்தையை பயிற்றுவிக்ககூடாது? எவையெல்லாம் தவறானவை; ஆடம்பரமானவை; உழைக்கும் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமானவை என்பதை தீர்மானிப்பதிலும்; அமுல்படுத்துவதிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் ஒரு போராட்டத்தின் ஊடாகத்தான் தீர்க்கப்படும்.

இது உறுதிமொழியில் முடிந்துவிடாது. பல தோழர்களுக்கு அது முடிவதில்லை. நுகர்பொருள் மோகத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னாலும், அதன் மீது மோகம் இருக்கிறது; சபலம் இருக்கிறது. அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஏன் ஒப்பிட வேண்டும்? அப்படி ஒப்பிடுவதென்றால், திருக்குறளுக்கு போகவேண்டும்.

தம்மினும் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்றகமகிழ்க.

பிளாட்பாரத்தில் வாழ்கிறவர்களோடு நம்மை ஒப்பிடலாமே! ஏன் வசதி, வாய்ப்பு இருக்கிறவர்களோடு ஒப்பிடவேண்டும்? உழைக்கும் மக்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து, தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அதற்கேற்ப எளிமையாக்கி கொள்வதும், சமூக விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், அந்த சிந்தனையை முன்நிறுத்துவதும் அவசியம்.

இவையெல்லாம் கணவன், மனைவி ஒத்த வாழ்க்கை வாழ அவசியம். தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் கணவன், மனைவி வாழத் துவங்குவார்களேயானால் குடும்ப முரண்பாடு தவிர்க்கவே முடியாதது! எங்கே ஆணாதிக்கம் இல்லாது, நாகரிகமான, ஆண், பெண் உறவு நிலவும் என்றால், எந்த குடும்பம் சமூக நலனை முன்நிறுத்தி அதற்கு உட்பட்டது தான் தனது குடும்ப நலன் என எந்த கணவனும், மனைவியும் உறுதியோடு ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும்.

தோழர்களின் வாழ்விலும் அப்படிப்பட்ட சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும் என்ற நம்பிக்கையை தெரிவித்து, வாழ்த்த வாய்ப்பு தந்தமைக்கு, நன்றி கூறி விடைபெறுகிறேன்!

0 பின்னூட்டங்கள்: