> குருத்து: மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை!

October 22, 2012

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை!

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.

600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல் மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிற பாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால் பகுதி இதன் மூலம் சரியாகியிருக்க வேண்டும்.

ஆனால் உண்மை நிலை இதுதானா?

இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன் பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 - 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப் படுத்தமுடியவில்லை.

வழுதூர் எரிவாயு மின் அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது. 2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.

101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரி வாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரி பாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?

இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக் கூடும்.

வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?

தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அன்மையில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன்கொண்ட மின் அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுது நீக்க 16 மாத காலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரி பாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த அவலம்?

மின் வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரத மிகு மின் நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது.

ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின் நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும்.

இந்த மின் நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரத மிகுமின் நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகமே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.

ஒப்பந்த காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே - பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன்பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின் வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.

மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?

இதனை விட மிகப்பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்த்து என்பதுதான் அந்தச் சோகம்.

மின்வாரியத்தின் அனைத்து மின் நிலையங்களும் பாரத மிகுமின் நிலையத்தின் எத்திரங்களையே உபயோகின்றன. அதன் புதிய மின் நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.

ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்தில் சீன நாட்டின் Tang Fang நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.

அனல் மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண் மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின் வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின் நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை.

அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:

• பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகு முறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும்.

• குத்தாலம் மற்றும் வழுதூர் மின் நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்டகாலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத்தானோ என்ற
சந்தேகம் உள்ளது . அரசு மின் நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின் நிலையங்கள் தங்குதடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின் நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின் நிலையம் இதுபோன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.

• ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின் நிலைத்தில் இருந்து இன்றுவரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும்.

• குத்தாலம் எரிவாயு மின் நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.

அன்புடன்
கோவை. சா.காந்தி,
19 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

நன்றி : கீற்று

தொடர்புடைய சுட்டிகள் : 

தமிழக மின்சார பிரச்சனைக்கான உண்மை காரணமும், அதற்கான தீர்வும்! - கோவை. சா.காந்தி - கீற்று

1 பின்னூட்டங்கள்:

Dino LA said...

மிக அருமையான பதிவு