> குருத்து: பெப்சி குடித்து சிறுமி துடிதுடித்து மரணம்!

February 11, 2014

பெப்சி குடித்து சிறுமி துடிதுடித்து மரணம்!

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிறு இரவு ஒரு தொழிலாளி தன் குடும்பத்தினருக்காக ஒரு அரை லிட்டர் பெப்சி பாட்டிலை வாங்கி கொண்டு போய், தன் நான்கு பிள்ளைகளுக்கு தருகிறார்.  குடித்த சில நிமிடங்களில் கடுமையாக வயிறு வலித்தும், வாந்தி எடுத்தும் பெற்றோர்களின் கண்ணெதிரே சுரண்டு விழுகிறார்கள்.

மருத்துவமனையில் சேர்த்தும் 8 வயதான அபிராமி இறந்துபோகிறாள்.  10 வயது லலிதா உயிருக்கு போராடுகிறார்.  மற்ற இரண்டு குழந்தைகளும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள்.

உடனடியாக, அரசு நிர்வாகம் ‘சுறுசுறுப்பாகி’ பெப்சி விற்ற கடைக்காரரை சிறைக்குள் தள்ளிவிட்டது.  உணவு கட்டுப்பாட்டு அதிகாரி சுத்துப்பட்டு கடையில் உள்ள குளிர்பானங்களை கைப்பற்றிவிட்டார்.  வீட்டில் குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த பெப்சி பாட்டிலை சோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். சோதனையின் முடிவு வந்த பிறகு, நடவடிக்கை எடுப்பார்களாம்.  இப்பொழுது தமிழகம் தழுவிய அளவில் காலாவதியாகி போன பொருட்களை, கலப்பட பொருட்களை கைப்பற்ற சுறுசுறுப்பாக இயங்கி, கல்லா கட்ட தயாராகிவிட்டார்கள்.

பெப்சி, கோக் வகைகள் குறித்து பல சமயங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இருப்பினும் தங்களது பணபலத்தாலும், அரசியல் பலத்தாலும் எல்லாவற்றையும் சரிகட்டுகிறார்கள். இந்த சாவு பெப்சியினாலேயே இருந்தாலும் கூட அதிகார வர்க்கத்தினரை கைக்குள் போட்டுக்கொண்டு, லஞ்சத்தால் அடித்து, தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள். நாம் ஒன்றிணைந்து இவர்களை இந்த மண்ணிலிருந்து விரட்டும் வரை, அரசும், அதிகார வர்க்கமும், இவர்களை காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இதே போல, 2004ஆம் ஆண்டு, ஒரு தனியார் பள்ளியில் தீப்பற்றி காற்றோட்டம் இல்லாமலும், தகுந்த தப்பிக்கும் வழிகள் இல்லாமலும் 94 குழந்தைகள் கும்பகோணத்தில் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிறகு, அரசு சுறுசுறுப்பாகி, பள்ளியென்றால், இவ்வளவு இடம் வேண்டும். இன்னின்ன வசதிகள் வேண்டும் என விதிமுறைகளை உருவாக்கியது.  கடந்த வாரம் வந்த செய்தி, அதிர்ச்சியாக இருந்தது.  தனியார் பள்ளிகள், இப்பொழுது நிலத்தின் விலை எல்லாம் எகிறிவிட்டது. அதனால், அரசு விதிமுறைகள்ப்படி பள்ளிகள் கட்டுவது இயலாத காரியம். அதனால், விதிகளை தளர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு போனார்கள். இப்பொழுது அரசும் இந்த ‘நியாய கோரிக்கையை’ ஏற்று, விதிகளை தளர்த்த தயாராகிவிட்டது.  அப்பொழுது, குழந்தைகளின் கதி என்னவாகும்? நாம் கும்பகோணத்தை மறந்துவிட்டோம்! அவர்கள் நமது மறதியில் வாழ்கிறார்கள்.

2 பின்னூட்டங்கள்:

Syed I H said...

அதிகாரவர்க்கத்தின் பலி ஆடுகளாய் ஏழை மக்களின் உயிர்.

அ. வேல்முருகன் said...

பூச்சிக் கொல்லி பானம்
மனிதக் கொல்லியாக மாறிப் போனது

ஆயினும் மக்கள்
பெருமைமிகு பானமாக நினைத்துக் கொண்டிருக்கிருக்கிறார்கள்