> குருத்து: தீப ஒளி திருநாள்!

October 21, 2017

தீப ஒளி திருநாள்!


எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!

ஐந்து குழந்தைகளுடன்

பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

0 பின்னூட்டங்கள்: