> குருத்து: December 2017

December 11, 2017

பருத்திப்பாலும் போலீசுகாரரும்!


பருத்திப்பால்.  மதுரை சிறப்புகளில் ஒன்று. பிரியா திரையரங்கு வாசலிலும், நடனா திரையங்கு (இப்பொழுது இல்லை) போகிற வழியிலும் இருவரும் விற்றுக்கொண்டிருப்பார்கள்.  அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் தவறாமல் குடிப்பதுண்டு.  

பருத்திவிதை, அரிசிமாவு, (மண்டை) வெல்லம், தேங்காய், ஏலக்காய், - கலவையில் அருமையாக இருக்கும்.  உடம்பு சூட்டை குறைக்கவல்லது. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.

சென்னையில் அம்பத்தூரில் ஒரு பெரியவரும், பாடி பிரிட்டானியா அருகே ஒரு பெரியவரும் பருத்திப்பால் விற்றுவருகிறார்கள். எப்பொழுதும் இரண்டு, மூன்று பேர் குடித்துக்கொண்டிருப்பார்கள். தேநீர் குடித்து சோர்வானவர்கள் பருத்திப்பால் அருந்தி பாருங்கள். தொடர்ந்து அருந்துவீர்கள்.  

அது சரி! பருத்திப்பாலுக்கும் போலீசுகாரருக்கும் என்ன சம்பந்தம்? பருத்திப்பால்காரரிடம் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார். 

”பைக்கில் வரும் போலீசு பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்கிற காசு பத்தலையாம்.  அதனால், மாசம் 200 ரூபாய் மாமூல் கேட்டாங்க!”

“எங்க பகுதியில் மாசம் 300ரூபாய். நீங்க 200 ரூபாய் தான் தர்றீங்க! பரவாயில்லையே” என்று குறுக்கிட்டு சொன்னேன்..  

”அட போங்க தம்பி!  போகும் பொழுதும், வரும் பொழுதும், ஒரு நாளைக்கு மூணு, நாலு கப் (ஒருகப் 10ரூ) ஓசியில்ல குடிச்சுட்டு போயிராங்க.  கணக்குப்பார்த்தா அதுவே மாதம் ரூ. 1000’ வந்துரும்” என்றார்.

பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!

பார்த்தா பெட்ரோலுக்கு காசில்லைன்னு வியாபாரிகள் கிட்ட போலீசு பிச்சை எடுக்குதுக!  நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே!  மக்களுக்கு சேவை செய்ய, பெட்ரோலுக்கு காசில்லாம நம்ம போலீசு இப்படி மக்கள்கிட்டேயே பிச்சை எடுக்கிறது தெரிஞ்சா, நாண்டுகிட்டு செத்துறவாங்களேன்னு தான்!